
பெங்களூரு,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.
இந்த துயர சம்பவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், அவசரம், அவசரமாக விழாவை நடத்தியதும்தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக பெங்களூரு கலெக்டர் ஜெகதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய மாநில மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்பேரில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர், உதவி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா, கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரீஷ் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சஸ்பெண் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி விகாஸ் குமார், தன் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தனது மனுவில், விசாரணை முறைகேடாக நடைபெற்றதாகவும், தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விகாஸ் குமார் தெரிவித்துள்ளார்.
எனவே, தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என விகாஸ் குமார் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். விகாஸ் குமாரின் மனு மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.