
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் அடையாளமான சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, அப்பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க. நிர்வாகி அல்ல. தி.மு.க. அனுதாபி என சட்டமன்றத்திலேயே சொல்ல வேண்டிய நிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் மீது, கல்லூரி மாணவி ஒருவர் அளித்துள்ள புகார் அதிர்ச்சி அளிக்கிறது. தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தி.மு.க. முக்கியப் பிரமுகர்களுக்கு இரையாக்க முயன்றதாக கூறியதுடன், ஒரு அமைச்சர், அவரது உதவியாளர் பெயரையும் குறிப்பிட்டிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தி.மு.க. நிர்வாகி தெய்வசெயல் மீது மாணவி புகார் அளித்தவுடன், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவியின் புகார் ஊடகங்களில் வெளியாகி, அரசியல் கட்சித் தலைவர்களும் பலரும் கண்டனம் தெரிவித்த பிறகே காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதுதான் நடந்தது. எங்கு பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், அதை அப்படியே மறைக்கவே தி.மு.க. அரசு முயற்சிக்கிறது. விஷயம் வெளியாகி வேறு வழியில்லாத நிலை ஏற்படும்போது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளும் அதன்பிறகு என்ன ஆகிறது என்றே தெரியவில்லை.
அரக்கோணம் கல்லூரி மாணவி கூறிய புகார்கள் குறித்து காவல்துறை தீர விசாரித்து, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது வரவேற்கத்தக்கது. தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழ்நாடு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.