![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/30/36585328-1.webp)
சென்னை,
சென்னை குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணியின் இணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் பொன்னம்பலம். இவரது வீடு சென்னையை அடுத்த படப்பை பகுதியில் உள்ளது. இவரது வீட்டின் மாடி பகுதியை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவ்வப்போது அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு அந்த பெண்கள் குடியேறியுள்ளனர்.
அப்படி இருந்தபோதும் செல்போனில் அவர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்து மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது சக தோழிகளோடு சேர்ந்து அதிமுக நிர்வாகியை துடைப்பத்தால் அடித்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த போலீசார் பொன்னம்பலம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொன்னம்பலத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.