
தூத்துக்குடி,
தூத்துக்குடி-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பல பயணிகள் ஏ.சி. பெட்டியில் பயணிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று, குருவாய் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இதனால் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதேநேரத்தில் இந்த ரெயில் செங்கோட்டை, புனலூர் வழியாக செல்கிறது. இது மலைப்பகுதியாக இருப்பதால், இந்த வழியாக செல்லக்கூடிய ரெயில்களில் 18 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும். இதனால் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஏ.சி. பெட்டியை இணைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள ஒரு பொதுப்பெட்டி நீக்கப்பட்டு, அதற்காக ஏ.சி பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டி வருகிற 4-ந் தேதி முதல் இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் ஒரு ஏ.சி பெட்டி, 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 10 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டியும் இணைக்கப்படுகிறது.