பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் பொன்முடி

6 days ago 5

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இயற்கை விவசாயம் மற்றும் கிராமப்புற சூழல்களில் பாறு கழுகுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கரிம கழிவுகளை மறு சுழற்சி மூலம் அகற்றுவதில் துப்புரவாளர்களாக பங்கு வகிக்கின்றன. வெண்முதுகு பாறு கழுகு, நீண்ட மூக்கு பாறு கழுகு மற்றும் செம்முக பாரூ கழுகு ஆகிய மூன்று வகை பாரூ கழுகுகளின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் குறைந்து காணப்பட்டதால் அவை அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பாறு கழுகுகளை பாதுகாப்பதற்காக டைக்ளோபெனாக் மற்றும் நிம்சுலைடு ஆகிய கால்நடை மருந்துகளை தடை செய்தது மட்டுமல்லாது வாழ்விடங்களை பாதுகாத்தல் மற்றும் வருடாந்திர பாறு கழுகளின் எண்ணிக்கையை கண்காணித்தல் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டன. இந்த கணக்கெடுப்பை தமிழ்நாடு வனத்துறை முன்னெடுத்து, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில வனத்துறையுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வன உயிரின சரணாலயம், கேரளாவில் வயநாடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் காப்பகம் மற்றும் நாகர்ஹோலே புலிகள் காப்பகம் ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு காட்சி கோண எண்ணிக்கை முறையில் மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 106 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் 33 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. இக்கணக்கெடுப்பின் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்நிலப்பரப்பில் மொத்தம் 390 பாறு கழுகுகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 2023-2024ம் ஆண்டில் நடத்தப்பட்ட பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் மொத்தம் 320 என கண்டறியப்பட்டது. இது நிலப்பரப்பில் கழுகுகளின் எண்ணிக்கையில் நிலையாக அதிகரித்து வருவதை குறிக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 157 பாறு கழுகுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது. இதில் அதிகப்படியாக வெண்முதுகு பாறு கழுகு 110 எண்ணிக்கையாக பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட மூக்கு பாறு கழுகு 31, செம்முக பாறு கழுகு 11 மற்றும் எகிப்தியன் பாறு கழுகு 5 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது. பாறு கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாத இடமாக முதுமலை புலிகள் காப்பகம் திகழ்கிறது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் 8 இடங்களில் மொத்தம் 60 கூடுகள் செயலில் உள்ளது காணப்பட்டது. அதில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 120 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வெண்முதுகு பாறு கழுகு (108) அதனை தொடர்ந்து நீண்ட மூக்கு பாறு கழுகு (10) மற்றும் செம்முக பாறு கழுகு (2) உள்ளது. இக்கணக்கெடுப்பின்போது மொத்தம் 34 பாறு கழுகுகளின் குஞ்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செம்முக பாறு கழுகின் கூடு தென்னிந்தியாவில் முதல் முறையாக முதுமலை புலிகள் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article