புதுடெல்லி: டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி: கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்கனவே முன்னதாக கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதன்படி, ஒன்றிய அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளை கண்டித்தும், வேலைவாய்ப்பின்மையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் , தொழிலாளர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்க வலியுறுத்தியும் ஜூலை 9ம் தேதி மத்திய வணிக சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் ஆதரவு அளிக்கப்படும். பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் மேற்கொள்ளும் தீவிர சிறப்பு திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். கடந்த 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் பயிர் சேதத்துக்கு உரிய போதிய இழப்பீட்டை வழங்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் சி.பி.எம் கட்சியான நாங்கள் உள்ளோம். அதேவேளையில் வரும் ஆகஸ்ட் மாதம் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும். கூட்டணி தொடர்பான முடிவை மாநில தலைமை தான் முடிவு செய்யும். பா.ஜ.க கட்சியானது அ.தி.மு.க.வை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் ஊன்ற பார்க்கிறது. அது முறியடிக்கப்பட வேண்டும். பாஜ மட்டுமல்ல, அக்கட்சியுடன் கூட்டணி சேரும் எந்த அணியும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post பாஜவுடன் கூட்டணி சேரும் எல்லா கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும்: டி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.