பாஜவுக்கு சீட்டை விட்டு கொடுத்தால் நெல்லையில் அதிமுக அழிந்து விடும்: எடப்பாடிக்கு தொண்டர்கள் பரபரப்பு கடிதம்; நயினார் நாகேந்திரன் போட்டியிட எதிர்ப்பு

3 hours ago 2

நெல்லை: ‘நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் 2026 தேர்தலில் போட்டியிடாவிட்டால் வரும் காலங்களில் அதிமுக அழிந்து விடும்’ என எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை தொண்டர்கள் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாளை., ராதாபுரம் தொகுதிகளில் கடந்த 2021 தேர்தலில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசும் வெற்றி பெற்றது.

அம்பை தொகுதியை அதிமுகவும், நெல்லை தொகுதியை அதிமுக கூட்டணியில் இருந்த பாஜவும் கைப்பற்றியது. நெல்லையில் தற்போதைய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவாக உள்ளார்.
நெல்லை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை கடந்த 2001ம் ஆண்டு முதல் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு வருகிறார். 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 2001, 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2006, 2016ல் தோல்வி அடைந்தார்.

இந்த இரு தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜவில் இணைந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் நெல்லை தொகுதியை கேட்டுப் பெற்று வெற்றி பெற்றார். தற்போது பாஜவின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக – பாஜ கூட்டணி உடைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக களம் கண்டன. ஆனால் ஒரு தொகுதியில் கூட இரு கட்சிகளும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக – பாஜ இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டுள்ளது. அதிமுக – பாஜ கூட்டணியை தலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்ற வெறுப்பே நிலவுகிறது. ஏனெனில் பாஜவுடன் கூட்டணி இருந்தால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை அதிமுக இழந்து விடும். இதன் மூலம் அரசியல் அரங்கில் அதிமுக ஓரங்கட்டப்பட்டு விடும் என தொண்டர்கள் கருதுகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், ‘நெல்லை மாவட்ட உண்மையான அதிமுக தொண்டர்கள்’ என்ற பெயரில் 55வது வட்ட அதிமுக செயலாளர் விடிஎம் குமார், முன்னாள் வட்ட செயலாளர் விடிஎம் தாமரைக்கனி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக கோட்டை ஆகும்.
இந்த தொகுதிகளில் 2001 முதல் இன்று வரை அதிமுக வீழ்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

15 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து 5 முறை போட்டியிட்டு, இரு முறை படுதோல்வி அடைந்து அதிமுக தொண்டர்களின் உழைப்பில், ஆதரவில் வாக்குகளை பெற்று 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர், கட்சி வளர்ச்சிக்கு, தொண்டர்கள், பொதுமக்கள் நலன்களுக்கு, மாவட்ட வளர்ச்சிக்கு எந்தவொரு பணியும் செய்யவில்லை. அதிமுக கட்சி அழிவுப் பாதையில் இருந்து வருகிறது. தொண்டர்கள் மிக மிக மோசமான பாதிப்பில் கஷ்ட, நஷ்டத்தில் 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். எனவே, நெல்லை மாநகர் மாவட்டத்தில் பொதுமக்களின், அதிமுக தொண்டர்கள், கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடப்பாடி பிறந்த நாளில், மிக கவனமாக பரிசீலனை செய்து 2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை, பாளை. தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற ஆவன செய்ய வேண்டுகிறோம்.

இரு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் நெல்லை, பாளை. சட்டமன்ற தொகுதியில் அதிமுக கட்சியும், தொண்டர்களும் அழிந்து அதிமுக நெல்லையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் பெயரை கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், அவரை குறிவைத்து எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் 2001 முதல் இன்று வரை அதிமுக வீழ்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

* ‘பணம், சொத்துகளை குவிக்கிறார் எம்எல்ஏ’
எடப்பாடிக்கு எழுதிய கடிதத்தில், ‘எம்எல்ஏ தனது குடும்பம், உறவினர்கள் நலனுக்காக மட்டுமே உழைத்து வருகிறார். பணத்தை, சொத்தை குவித்து வருகிறார். எம்எல்ஏ அலுவலகம் வருவதுமில்லை. செயல்படுவதுமில்லை. இரட்டை இலை சின்னத்திற்கு, தாமரை சின்னத்திற்கு வாக்களித்த நெல்லை, பாளையங்கோட்டை பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தெருவில் நிற்கிறார்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் பெயரை குறிப்பிடாமல் சொத்துகளை குவிப்பதாக கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாஜவுக்கு சீட்டை விட்டு கொடுத்தால் நெல்லையில் அதிமுக அழிந்து விடும்: எடப்பாடிக்கு தொண்டர்கள் பரபரப்பு கடிதம்; நயினார் நாகேந்திரன் போட்டியிட எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article