பாஜகவுடன் நெருக்கம் காட்டினால் சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்காது: கே.சி.வேணுகோபால்

5 hours ago 2

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஆலப்புழையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சசிதரூர் எம்.பி. எல்லையை மீறி பாஜகவுடன் நெருக்கம் காட்டினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி தயங்காது. அவர் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அது வரவேற்கத்தக்கது.

ஆனால் அவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவது ஆபத்தானது. காங்கிரஸ் கட்சி கருத்து சுதந்திரம் கொண்டது. அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் கட்சி கட்டுப்பாடுகளை யார் மீறினாலும் ஏற்க முடியாது. அவ்வாறு செய்ய முயன்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு உரிமை உள்ளது.

அதுபோன்ற ஒரு நிலை ஏற்படாது என நம்புகிறோம். அவ்வாறு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். மீண்டும் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று சசிதரூர் எம்.பி. ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரியாமல் மீண்டும் வெளிநாடு செல்ல முயல்வது சரியான நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article