* குழந்தைகளை பார்க்க செல்கிறேன்: தைலாபுரத்தில் பேட்டி
பாஜவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திடீரென்று நேற்று தைலாபுரம் தோட்டத்திலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் காலை 10 மணியளவில் காரில் அவசர, அவசரமாக சென்னை புறப்பட்டு சென்றார். அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்து சில கேள்விகளை கேட்டனர்.
கேள்வி: எதற்காக இந்த திடீர் சென்னை பயணம்?
பதில்: எனது பெரிய மகள், சின்ன மகள், குழந்தைகள், கொள்ளு பேரன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்க்க செல்கிறேன். திங்கள் கிழமை திரும்ப வருகிறேன். உங்களை செவ்வாய் கிழமை சந்திக்கிறேன்.
கேள்வி: மருத்துவ பரிசோதனைக்காக செல்கிறீர்களா?
பதில்: மருத்துவ பரிசோதனைக்காக செல்லவில்லை. ஐயம் ஆல் ரைட்.
கேள்வி: ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பேசியது குறித்து?
பதில்: பேசிக்கிட்டு இருக்கிறார்கள். அவரை நான் ரொம்ப மதிக்கிறவன். எங்களுடைய நட்பு நீண்ட நாள் நட்பு. அதே மாதிரி சைதை துரைசாமி 30 ஆண்டுகளாக பழக்கம். இரண்டுபேரும் இங்கு வந்தார்கள் நீங்கள் பார்த்தீர்களே.
கேள்வி: அன்புமணி பேச்சுவார்தை நடத்தியது குறித்து?
பதில்: பார்த்தாங்க பேசினாங்க. இதுகுறித்து அப்புறமாக வந்து சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* மருத்துவ பரிசோதனைக்காக வந்தேன்: சென்னையில் பேட்டி
தைலாபுரத்தில் இருந்து நேற்று திடீரென சென்னைக்கு ராமதாஸ் புறப்பட்டார். சென்னைக்கு வந்தபின் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். பல் மருத்துவரைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறேன். யாரையும் சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தில் சென்னைக்கு வரவில்லை. வேறு எந்தத் திட்டமும் இல்லை. ஆடிட்டர் குருமூர்த்தி அறிவார்ந்தவர். அவர் சொன்னால் நடக்கும் என்று நம்புகிறேன். அதனால் குருமூர்த்தி தைலாபுரம் வந்து பேசினார். என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்ல முடியாது.
தாய் மீது பாசம் கொண்டவன் என்று அன்புமணி பேசியதற்கு பதில் கூற முடியாது. பாஜ கூட்டணியில் இருந்து மீண்டும் இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. இனி எல்லாம் நல்லதாக நடக்கும் என்று பாமக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சொல்லி கொள்கிறேன். அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை. அவரை சந்திக்கத் திட்டம் எதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது. தீர்வு இல்லாமல் எதுவும் இல்லை. பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமூகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். முடிந்துபோனதை பேச வேண்டாம். இனி நடக்கப்போவதைப் பற்றிப் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வி: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி பாஜக – பாமக கூட்டணி உருவாகுமா?
பதில்: கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல. நான் அதைப்பற்றி நினைக்கக்கூட இல்லை. நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும்.
கேள்வி: முகுந்தனுக்கு கட்சி பொறுப்பு பற்றி?
பதில்: கட்சியில் நிறைய பொறுப்புகள் உள்ளன. முகுந்தனுக்கு தற்போது கட்சியில் ஆர்வமில்லை. அவர் தொழில் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்.
கேள்வி: கமல்ஹாசனின் கன்னட சர்ச்சை விவகாரம் குறித்து?
பதில்: இந்த பிரச்னையில் நான் பதில் கூறுவது நன்றாக இருக்காது.
கேள்வி: பாமகவில் கருத்து முரண்பாடுகளால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?
பதில்: கருத்து முரண்பாடுகளால் வரும் தேர்தலில் பாமகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை.
கேள்வி: அன்புமணிக்கு மீண்டும் பாமக தலைவர் பதவி அளிக்கப்படுமா?
பதில்: பேசுவோம்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
* குழந்தைகளை பார்க்க செல்கிறேன். மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்தேன் என்று கூறிய ராமதாஸ், நேற்று இரவு பாஜ தூதர்களை தி.நகரில் உள்ள ஏ.கே.மூர்த்தி மகன் வீட்டில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினார்.
* ‘அன்புமணி, பாஜ தூதருடன் பேசியதை அப்புறம் பேசுகிறேன்’
அன்புமணியுடன் மோதலுக்கு பின்பு கட்சி நிர்வாகிகளை ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியுடன் மோதல், கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்த கேள்விக்கு, வருவாங்க போவாங்க… இருக்கும் இருக்காது… செல்லும் செல்லாது… நடக்கும் நடக்காது… என புரியாத புதிராக பேசினார். நேற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸ், ‘சென்னைக்கு குழந்தைகள், பேரன்களை பார்க்க போகிறேன். மருத்துவ பரிசோதனைக்கு செல்லவில்லை’ என்று தைலாபுரத்தில் பேட்டியளித்தார்.
சென்னைக்கு வந்த பின்பு அளித்த பேட்டியில், ‘மருத்துவ பரிசோதனைக்காக வந்து இருக்கேன்’ என்று கூறி உள்ளார். அதேபோல், ஆடிட்டர் குருமூர்த்தி மரியாதை நிமித்தமாக ராமதாஸை சந்தித்தாக பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கூறினார். ஆனால் நேற்று ராமதாசிடம், ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு குறித்து கேள்வி கேட்டபோது, ‘பேசிக்கிட்டு இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார். இது கூட்டணி குறித்து பேச்சு நடக்கிறது என்று ராமதாஸ் சூசகமாக ஒப்பு கொண்டுள்ளார். தொடர்ந்து, அன்புமணி மற்றும் பாஜ தூதர் சந்திப்பு குறித்து கேள்வி கேட்டதற்கு அப்புறம் பேசுவதாக கூறி உள்ளார். இதன் மூலம் பாஜவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதை ராமதாஸ் மறைமுகமாக ஒப்பு கொண்டுள்ளார்.
The post பாஜ நெருக்கடியால் அவசர பயணம்: மாற்றி மாற்றி பேசிய ராமதாஸ் appeared first on Dinakaran.