
லாகூர்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், வில்லியம்சன் 102 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 363 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்டெ்டுக்கு 312 ரன்களே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 100 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னெர் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இது பாகிஸ்தான் மண்ணில் தொடர்ச்சியாக நியூசிலாந்து பெற்ற 7-வது வெற்றியாகும். இதன் மூலம் பாகிஸ்தான் மண்ணில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த வெளிநாட்டு அணி என்ற இந்தியாவின் மாபெரும் சாதனையை நியூசிலாந்து சமன் செய்துள்ளது. இரு அணிகளும் தலா 7 தொடர்ச்சியான வெற்றிகளை பாகிஸ்தான் மண்ணில் பதிவு செய்துள்ளன.