
சென்னை,
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி தங்கம் விலை முதன் முறையாக பவுனுக்கு ரூ.64 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.
இதற்கிடையே கடந்த மாதம் 28-ந்தேதி தங்கம் விலை ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63 ஆயிரத்து 680 ஆக இருந்தது. பின்னர், மார்ச் 1-ந்தேதி கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்து ரூ.63 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
அதன்பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில், நேற்று முன் தினம் விலை உயர்ந்து மீண்டும் 64 ஆயிரத்தை தாண்டியது. நேற்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து 8,065 ரூபாயாக விற்பனையானது. ஒரு பவுன் ரூ. 440 உயர்ந்து 64,520 ரூபாயாக விற்பனையானது.
தங்கம் விலை மீண்டும் ஏறத்தொடங்கி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று காலை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தங்கம் விலை குறைந்தது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 20-க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64ஆயிரத்து160க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில், மூன்று மணிநேரத்தில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.64,480க்கும், ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,060க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.