
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. 'இம்பேக்ட் பீல்டர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி இந்த போட்டிக்கான சிறந்த பீல்டராக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருதை இந்திய முன்னாள் வீரர் ஷிகர் தவான் வழங்கி கவுரவித்தார்.