
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணி தொடங்கி, தற்போது காரைக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
