பா.ம.க. சித்திரை முழுநிலவு மாநாடு தொடக்கம்

18 hours ago 3

செங்கல்பட்டு,

பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆம்புலன்சுகளும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதேபோல, மாநாட்டு திடலுக்கு வருபவர்களின் வசதிக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செயப்பட்டு உள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில், இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6.10 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வருகை தந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

மாமல்லபுரத்தில் பா.ம.க. சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு படையெடுக்கும் தொண்டர்களால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. மாநாட்டுக்கு வரும் வாகனங்களை மட்டுமே கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

மாநாட்டில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மதுவிலக்கு உள்ளிட்டவைகள் குறித்து வலியுறுத்தப்பட இருக்கிறது. பின்னர், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 

Read Entire Article