திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை: 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

4 hours ago 2

திருப்பூர்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 19). இவர் திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு கோல்டன் நகர் கருணாகரபுரி பகுதியில் தலை நசுங்கிய நிலையில் பிரகாஷ் இறந்து கிடந்தார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பிரகாஷின் தலை உடைந்து காணப்பட்டது. அவரது உடல் அருகே பெரிய கல் கிடந்தது. பிரகாஷ் தலை மீது கல்லை போட்டு அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பிரகாஷ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மது குடிக்க நண்பர்களுடன் சென்றபோது ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வந்தனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏரியா பிரச்சினை காரணமாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article