
சென்னை,
நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியை பெற்றுக் கொண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயாரா? என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"மத்தியில் 'இந்தியா' கூட்டணியின் ஆட்சி அமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தியையும் அளிக்கச் செய்திருந்தார்.
டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்று கூட சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியை பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.