
சென்னை,
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பாதுகாப்பை அதிகரிக்க போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சோதனை செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் உளவுத்துறையை முடுக்கிவிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.