
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை சுமார் 11.40 மணியளவில் தொடங்கியது. பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. பின்னர் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வந்தனர். கிரிவலம் தொடங்கும் முன்பு பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். நேற்று பகலில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கிரிவலப்பாதையில் பலர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பவுர்ணமி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் 12.57 வரை இருந்ததால் இன்று காலை வரையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றபடி காணப்பட்டனர்.
அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.