சென்னை,
கடந்த 1997 டிசம்பர் 15 முதல் ஜூன் 20, 2000 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த உத்தரவை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை 6-வது கூடுதல் அமர்வு கோர்ட்டு நீதிபதி கே.தனசேகரன் நேற்று விசாரித்து, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை உறுதிசெய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.
இதன்படி ஜவாஹிருல்லா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹைதர்அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோரின் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
மேலும் ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.