
பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறை காரணமாக உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு இயக்கப்படும் மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்காரில் செல்ல பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தநிலையில் ரோப்கார் சேவையை கூடுதல் நேரம் இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இனி காலை 6.30 மணி முதல் இயக்கப்படும். மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிக்காக அதன் சேவை நிறுத்தப்படும். அதன்பிறகு இரவு 10 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.