
பழனி,
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் காலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தந்தப்பல்லக்கு புறப்பாடும், இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை வாகனங்களில் வீதிஉலாவும் நடக்கிறது.
திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு பக்தி இன்னிசை, சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது.
நாளை (திங்கட்கிழமை) வைகாசி விசாக நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9.30 மணிக்கு மேல் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது. பின்னர் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 12-ந்தேதி கொடி இறக்குதலுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்படுகிறது.