சென்னை: பழநி கோயில் நிதியில் ரூ.20 கோடி செலவிட்டு ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி கட்ட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் இருந்து தொப்பம்பட்டியில் கட்டப்பட்டுள்ள கல்லூரியை, ஒட்டன்சத்திரம் அருகே மாற்றி, பழநி கோயில் நிதியிலிருந்து ரூ.20 கோடிக்கு மேல் செலவிட்டு நிரந்தரக் கட்டிடம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும் டி.ஆர்.ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.செளந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜனிடம், “அரசுப் பணத்தில் கல்லூரி கட்டுவதாக இருந்தால் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், கோயில் நிதியில் இவ்வளவு பெரிய தொகையை எப்படி எடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “தற்போது டெண்டர் மட்டுமே கோரப்பட்டுள்ளது” என்றார்.