
சென்னை,
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்கெனவே அறிவித்து இருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுந்தது.
இதனிடையே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா என்று அண்மையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், '' இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆம் தேதி என்று சொல்லி இருக்கிறோம். அந்த நேரத்தில் வெயிலின் தன்மையைப் பார்த்து, தமிழக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வானிலை குறித்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் சொல்வதைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், பரவலான இடங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்றே குறைவாக காணப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என்றும், ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அரசு - அரசு நிதி உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.