காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் புதிய பசுமை வெளி விமான நிலையத் திட்டத்துக்கான நிலம் எடுக்கும் பணி இன்று (ஜூலை 9) தொடங்கியது. முதல் கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் ஒப்புதலுடன் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு போராட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்க கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டது. இந்த நிலையில், இந்த புதிய பசுமை வெளி விமான நிலையத் திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்க ளிடம் இருந்து கோரிக்கை வந்ததாகவும், அதன் அடிப்படையில் நில மதிப்பு மறு நிர்ணயம் செய்யப்பட்டதாக ஜூன் 25ம் தேதி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.