
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
கேள்வி:-
பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் விரக்தியை காட்டுகிறதா?.
பதில்:-
காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுமுகமான சூழலை கெடுக்கவும், பெருகிய சுற்றுலாவையும், பயங்கரவாதத்தில் இருந்து விலகிய இளைஞர்களையும் பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது.
காஷ்மீர் இளைஞர்கள் இந்த தீய திட்டத்தை புரிந்துகொண்டு விட்டனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களில் முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. இதுபோன்ற தேசிய ஒற்றுமை இதற்கு முன்பு அங்கே காணப்படவில்லை.
370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு, கற்கள் வீச்சு 2024-ல் பூஜ்ஜியமாகி உள்ளது. இதுவே 2010-ல் 2,654 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. 2022-ல் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில், 2023-ல் இது 2.11 கோடியாக உயர்ந்துள்ளன.
2004-14-ம் ஆண்டு காலகட்டத்தில் 7,217 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 2014-25 காலகட்டத்தில் இது 67 சதவீதம் குறைந்து 2,347 ஆக குறைந்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பு 1,060-லிருந்து 42 சதவீதம் குறைந்து 616 ஆக குறைந்துள்ளது.
பொதுமக்கள் உயிரிழப்பு 1,769-ல் இருந்து 77 சதவீதம் குறைந்து 402 ஆக குறைந்துள்ளன. ரூ.12 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கடந்த 1.5 ஆண்டுகளில் ஒரு இளைஞரும் பயங்கரவாத இயக்கத்தில் சேரவில்லை.
கேள்வி:-
எல்லைப்பாதுகாப்பு உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊடுருவல்கள் நடைபெறும் பகுதிகளில் வேலி அமைப்பதாக கூறினீர்கள். அதன் நிலை என்ன?
பதில்:-
பாரதம் இப்போது எல்லைப் பாதுகாப்பில் பலமாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 228 கிலோ மீட்டர் தூரத்திற்கும்., இந்தியா-வங்காளதேச எல்லையில் 399 கிலோ மீட்டர் தூரத்திற்கும்., இந்தியா-மியான்மர் எல்லையில் 9 கி.மீ. வரையும் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.