
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் செயல்பட்டு வருவதாக, மாநில அரசின் கூட்டுறவுத்துறை மந்திரி கே.என்.ராஜண்ணா சமீபத்தில் கூறியிருந்தார். கடந்த 2013-18 வரையிலான காலகட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு அதிகார மையம்தான் இருந்ததாகவும், ஆனால் தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட அதிகார மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வரும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசியல் மாற்றம் நிகழும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் கர்நாடக மாநில அரசாங்கத்தின் தலைமையில் மாற்றம் ஏற்படப்போகிறதா? கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்தன. இருப்பினும் இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மாநில காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் எதுவும் இல்லை என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சிக்குள் எந்த மோதலும் இல்லை. மாற்றம் ஏற்படும் என்றுதான் ராஜண்ணா கூறினாரே தவிர, இதுதான் அந்த மாற்றம் என்று அவர் நிச்சயமாக கூறவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கூறப்படும் தகவல்களுக்கு என்ன விளக்கம் அளிக்க முடியும்? இதுபோன்ற கருத்துகளை நிராகரிப்பது நல்லது" என்று தெரிவித்தார்.