தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் தேர்தல் ஆணையம்

5 hours ago 2

புதுடெல்லி,

இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிடாமல், அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததும், அவற்றின் அலுவலகங்கள் எந்த இடத்திலும் அடையாளம் காணப்படாததும் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 345 RUPPs அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2,800க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் பல கட்சிகள் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் இத்தகைய கட்சிகளை அடையாளம் காணும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இதன் அடிப்படையில் 345 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு காரணம் கூற நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின், அவை தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றுக்கு விளக்கம் தர வாய்ப்பு அளிக்கப்படும். எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும்.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்), 1951-ம் ஆண்டின் மக்களாட்சித் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டப்பிரிவின் கீழ், அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் வரிவிலக்கு போன்ற பல நன்மைகளை பெறுகின்றன.

2019-ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்களில் எதிலும் போட்டியிடாத கட்சிகளையும், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளையும் நீக்குவதன் மூலம் அரசியல் அமைப்பை தூய்மைப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்தத் தேடல் பணியின் முதல் கட்டமாக 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்பை சீர்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article