
புதுடெல்லி,
காஷ்மீரில் 26 பேரை பலி கொண்ட பஹல்காம் தாக்குதலை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.
அவர் பேசும்போது, ஆபரேஷன் சிந்தூர் என்பது மக்களின் உணர்வு, மக்களின் வைராக்கியம். இதில், நாட்டின் திறன் உறுதியுடன் வெளிப்பட்டு உள்ளது. இந்தியர் ஒவ்வொருவரும் அமைதியையே விரும்புகின்றனர். புத்த பவுர்ணமியான இன்று புத்தர் வழியில் அமைதியையே இந்தியா விரும்புகிறது.
நம்முடைய எல்லைகளை பாகிஸ்தான் தாக்கியது. ஆனால், நாம் பாகிஸ்தானின் இதயத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் இனி அணு ஆயுத மிரட்டலில் ஈடுபட முடியாது. நம்மிடம் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் கெஞ்சியது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் இனி ஒரே பேச்சு.
பயங்கரவாதிகளின் விஷயத்தின் இனி துளியும் சமரசம் இல்லை. இது போருக்கான காலமும் அல்ல. பயங்கரவாதத்திற்கான காலமும் அல்ல. இந்த பதிலடி பயங்கரவாதிகள் மட்டுமின்றி,, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கும்தான். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு ஒரு நாள் பாகிஸ்தானையே அழித்து விடும். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அரசும், எதிர்க்கும் அரசும் ஒன்றாக செயல்பட முடியாது.
ஆபரேஷன் சிந்தூர் என்பது ஆரம்பம் மட்டுமே. தேசத்திற்கே முதலிடம் என்ற கொள்கையின்படி, பயங்கரவாத முகாம்களை நாம் நொறுக்கினோம். பாகிஸ்தானின் பஹல்பூரும், முரிக்கேயும் பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்கள்.
பாகிஸ்தானின் டிரோன்களை தூள் தூளாக்கினோம். நமது ஒற்றுமையே நம்முடைய மிக பெரிய வலிமையாகும். பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒரே நேரத்தில் செயல்பட முடியாது. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க இயலாது. இனிமேல் அவர்கள் அத்துமீறினால் முகத்திலேயே குத்துவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான பாரதத்தின் நீதி இது. நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.