
இஸ்லமாபாத்,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்தியா, தனது வான் பாதுகாப்பு மூலமாக முறியடித்தது. பாகிஸ்தானின் விமான தளங்களையும் பிரமோஸ் ஏவுகணை மூலமாக இந்தியா தாக்கியது. இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என ஆரம்பத்தில் பூசிமெழுகிய பாகிஸ்தான், தற்போது மெல்ல மெல்ல உண்மையை ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளது.
அந்த வகையில்தான், கடந்த 9, 10-ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:
இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். கடந்த 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் குறிவைக்கப்பட்டன. அதில் ராவல்பிண்டி விமான நிலையமும் அடங்கும்" என்று கூறினார்.