
முல்லான்பூர்,
ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் அடித்தார். குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 80 ரன்கள் அடித்தார். மும்பை அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 436 ரன்கள் அடித்துள்ளன. இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் பிளே ஆப் சுற்றின் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிக ரன்களாகும். இந்த சாதனையை மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இணைந்து படைத்துள்ளன.
அந்த பட்டியல்:
1. மும்பை - குஜராத் - 436 ரன்கள்
2. பஞ்சாப் - சென்னை - 428 ரன்கள்
3. ஐதராபாத் - பெங்களூரு - 408 ரன்கள்
4. குஜராத் - மும்பை - 404 ரன்கள்
5. பெங்களூரு - லக்னோ - 400 ரன்கள்