சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலை போர்மேன் லோகநாதன் கைதான நிலையில் மேலும் 3 பேருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கீழத்தாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 வட மாநில தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். ஆலையின் உரிமையாளர் கணேசன், மேலாளர், 2 போர்மேன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 4 முறை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் 8 அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வாகனங்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளன. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் ஆலைக்கு அருகே நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடிப்பது முழுமையாக நின்றபிறகே, ஆலைக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா? விதிகளை மீறி பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றதா? பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு! appeared first on Dinakaran.