
சென்னை,
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாடலான 'உன் முகத்தை பார்க்கலையே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் 23ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் 'படைதலைவன்' திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சண்முக பாண்டியன் பதிவிட்டுள்ளார். "'படைதலைவன்' படம் மே 23ம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம்" என்று சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டிராகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.