பங்குனி உத்திர திருவிழா: பழனிக்கு பக்தர்கள் காவடி எடுப்பது ஏன்?

1 day ago 3

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழனி முழுவதும் காவடி காட்சிகளாக இருக்கும். இந்த வழக்கம் இடும்பன் மூலம் தொடங்கியது. இது தொடர்பான புராண கதையை பார்ப்போம்.

அகத்திய முனிவர் கந்தகிரியில் உள்ள சிவகிரி, சக்திகிரி எனும் இரண்டு மலைகளை சிவ சக்தியாக கருதி பூஜித்து வந்தார். பின்னர், தென்திசையில் பயணித்து பொதிகை மலையில் தங்கினார். அப்போது, சிவகிரி, சக்திகிரியை பொதிகை மலைக்கு கொண்டு வரும்படி தன் சீடனாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.

இடும்பன் அசுரனாக இருந்தாலும் சிறந்த பக்திமான். தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்றுகளையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரம்மதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான். தன் தோள் மீது பிரம்மதண்டத்தின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு பொதிகை மலைக்குத் திரும்பி வரும்வழியில் திருவாவினன்குடிக்கு (பழனி) மேலே ஆகாயத்தில் பறந்த போது முருகப்பெருமான் அவ்விரு மலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச் செய்து விட்டார்.

தன்னையறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயன்றும் பிரம்மதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலைகளை அசைக்கமுடியாமல் திகைத்து நின்றான். மறுபடி அக்காவடியைத் தூக்க முயன்றபோது சிவகிரி குன்றின் மீது ஓர் அழகிய சிறுவன் கோவணத்துடன் ஆண்டியின் உருவில் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். அச்சிறுவனால் தான் மலையை அசைக்கக் கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையில் இருந்து இறங்கும்படி அதட்டினான். சிறுவனோ மலை தனக்கே சொந்தம் என வாதிட்டான். சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான். முருகப்பெருமானுடன் நடந்த போரில் இடும்பன் மாண்டான். இதனால் வேதனை அடைந்த அவன் மனைவி இடும்பி, கணவனை காப்பாற்ற சிறுவனை (முருகப்பெருமானை) வேண்டினாள்.

தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியரும், முருகப்பெருமானை வணங்கினார். முருகப்பெருமானின் அருளால் அக்கணமே இடும்பாசுரன் உயிர்பெற்று எழுந்தார். அனைவரும் முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து அவரை வணங்கி பக்தியோடு துதித்தனர். குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான், இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேரருள் செய்தார்.

சிவகிரி மற்றும் சக்திகிரியை காவடியில் சுமந்து வந்த இடும்பனுக்கு முருகப்பெருமானின் திருவருள் கிடைத்தது. அதேபோல் காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கும் அருள் வழங்குவதாக முருகப்பெருமான் அருளினார். அதனால்தான் பக்தர்கள் பங்குனி உத்திரத்தன்று பலவித காவடிகளை பக்தியுடன் ஏந்தி வந்து முருகனை வழிபடுகின்றனர். இளவரசனாக முருகன் இடும்பனுக்கு காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. 

Read Entire Article