
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாட்டுச்சந்தையும், திங்கட்கிழமை ஆட்டுச்சந்தையும் நடைபெற்று வருகிறது. பக்ரீத் பண்டிகை வருகிற 7-ந் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேலூர் சந்தைக்கு இன்று ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மதுரை மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும், சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்தும் சரக்கு வாகனங்களில் ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கிச்செல்ல லாரிகள், வேன்களில் வியாபாரிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அதிகாலை 3 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது. ஆடுகளை கையில் தூக்கி எடைகளை கணிக்கும் பாரம்பரிய முறையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை ஆகின. பக்ரீத் பண்டிகை கொண்டாடுபவர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கினார்கள். இதனால் மேலூர் வாரச்சந்தையில் இன்று ரூ.5 கோடிக்குமேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.