விகேபுரம்,ஜன.26: பாபநாசம் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டுச்சென்ற பிளாஸ்டி கழிவு பொருட்களை விகேபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள் அகற்றினர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயில் நவகைலாயத்தில் முதலாவது தலமாக சூரியனுக்கு அதிபதியாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு நெல்லை மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். முக்கிய விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் ேபான்ற கழிவு பொருட்களை போடுவதற்கு ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பக்தர்கள் அதில் போடாமல் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகளை ஆங்காங்கே போட்டு விட்டு செல்கின்றனர். மேலும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலும் பிளாஸ்டிக் பொருட்களை வீசி விட்டு செல்கின்றனர். இதனால் பாபநாசம் கோயில் பகுதி மற்றும் தாமிரபரணி ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து விகேபுரம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரன் வழிகாட்டுதலின்படி, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்’ என்பதை வலியுறுத்தியும், பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பாபநாசம் தாமிரபரணி ஆற்றினை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இப்பணியில் மகளிர் சுயஉதவி குழு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர்.
குறிப்பாக பாபநாசம் கோயில் வளாகம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் வீசி எறிந்து சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை முழுமையாக வரவேற்றுள்ள பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post பக்தர்கள் வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு அபாயம்; பாபநாசம் கோயில் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.