
அபுஜா,
நைஜீரியாவின் தென்மேற்கு ஓகுன் மாநிலத்தில் நடந்த விளையாட்டுத் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு விளையாட்டு வீரர்கள் பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்த பஸ்சில் பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 35 பயணிகள் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பஸ்சில் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு கனோ மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பாலத்தின் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 21 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாகப் பஸ்சில் இருந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் சிலர் மட்டுமே உயிர் தப்பினர்.
நைஜீரியாவில் சாலைகள் மிகவும் மோசமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அந்த நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனால் பல்வேறு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் உலக விளையாட்டு அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நடந்துள்ள இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து கீழே விழுந்த போது சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்லவில்லை எனவும், டிரைவரின் சோர்வு மற்றும் அதிகப்படியான வேகம் மட்டுமே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்து இரவு நேரத்தில் நடந்துள்ளது. எனவே, அந்த டிரைவர் ஓய்வு எடுக்காமல் வண்டியை ஓட்டியது இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.