
சென்னை,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 3 செ.மீட்டர் மழை பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம், நெல்லை மாவட்டம் ஊத்து, பாபநாசம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீட்டர் மழை பெய்தது. இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அந்த வகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (சனிக்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதி, தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வருகிற 3-ந்தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. மார்ச் மாதம் 4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.