
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் கடந்த மார்ச் 18ம் தேதி அதிகாலை தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி, நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலம் தொடர்பான சர்ச்சையில், அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக, கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகீர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில், கார்த்திக், 32, அக்பர் ஷா, 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நூருனிஷாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.