
நெல்லை,
பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த வக்கீல் இசக்கி பாண்டியன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு பல்வேறு தகவல்களை கேட்டு மனு அனுப்பி இருந்தார்.
அதற்கு நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பொது தகவல் அலுவலர் அமுதா பதில் அளித்துள்ளார். அதில், "நெல்லை மாவட்டத்தில் கடந்த 2021 முதல் 2025-ம் நிதியாண்டு வரை சுமார் 1,095 பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகபட்சமாக 2021-22-ம் ஆண்டில் 302 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரூ.11 கோடியே 30 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.4.69 கோடி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக ஆண்டொன்றிற்கு 250 வழக்குகள் வரை வன்கொடுமை பாதிப்புகளில் உள்ளானவர்கள் புகார் அளித்து பதியப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.