நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்
பெங்களூருவிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிவகங்கா எனும் கிராமம். இந்தக் கிராமத்தின் மலையடி வாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடி கொண்டு அருள்பாலிக்கிறார், ‘கவிகங்காதீஸ்வரர்’. இந்த சுவாமிக்கு அபிஷேகத்திற்காக கொடுக்கப்படும் நெய், அபிஷேகம் முடிந்து அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அப்போது அது வெண்ணெயாக மாறியிருக்கும் அற்புதம். இந்த வெண்ணெய் சர்வ நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.
ஒளி வீசும் அம்மன்
திருபுவனம் அருகே கல்லுமடையிலுள்ள திருநாகேசுவர முடையார் கோயிலில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் சிலை அற்புதமானது, அதிசயமானது! அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இந்த அம்மன் கண்களிலிருந்து பிரகாசமான ஒளி வீசுகிறது! அதைத் தவிர இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இந்த அம்மன் சிலை தானாக பச்சை, ஊதா, மஞ்சள் நிறங்களில் மாறுகிறது.
நேர்க் கோட்டில் நவகிரகங்கள்!
எல்லாக் கோயில்களிலும் நவகிரகங்களைச் சதுரமான அமைப்பில் வைத்திருப்பார்கள். ஆனால் திருவாரூர் தியாகராஜ பெருமான் கோயிலில் மட்டும் நவகிரகங்கள் ஒரே நேர்க் கோட்டில் நின்ற நிலையில் காட்சி அளிக்கின்றன. சிவபெருமானே இங்கு தியாகராஜராக வந்து வீற்றிருக்கிறார்; என்பதால் நவகிரகங்களும் தனித்தனியே ஆதிக்கம் காட்டாமல் அவருக்கு கீழ் அடங்கி இருப்பதாக ஐதீகம்.
சிவபெருமானின் மகள்
ஹரித்துவாரில் சிவலிங்கமலை என்ற தலம் உள்ளது. இங்கே மானஸா தேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தேவிக்கு அரிசிப் பொரி நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த அம்மனை சிவபெருமானின் மகள் என்று அங்குள்ள பக்தர்கள் எண்ணி வணங்கி வருகின்றனர்.
குழந்தை வரம் தரும் குடம்!
பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் அமிர்த குடம் ஒன்று உள்ளது. மக்கட்பேறு கிடைக்கப் பெறாதவர்கள் இந்தக் குடந்தை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கோயிலை மூன்று முறைவலம் வந்தால் குழந்தை பிறக்கும் என்பது இங்கு ஐதீகம்.
லவன், குசன் கோயில்!
ராமனின் புதல்வர்களான லவன், குசனுக்கு நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயத்திற்கு அருகில் தனிக் கோயில் உள்ளது.
வடகுரங்காடுதுறை
கும்பகோணத்தின் அருகில் சௌந்திரகேசநாயகி, உடன் உறை அழகு சடைமுடி நாதர் குடியிருக்கும் கபிஸ்தலம் உள்ளது. வாலி வந்து பூஜித்த ஸ்தலம். ஆகவே இத்தலத்திற்கு ‘வட குரங்காடுதுறை’ என்ற பெயருமுள்ளது. சென்னி மரம் இக்கோயிலின் தல விருட்சம்.
தாம்புக்கயிறு!
கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகே உள்ள ‘திருக்கூர்’ எனும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால்; தங்களுடைய எடைக்கு எடை தாம்புக் கயிறை காணிக்கையாக செலுத்துகின்றனர். இப்படி வழங்கப்பட்ட காணிக்கைகள் கோயில் மண்டபத்தில் கட்டித் தொங்க விடப்படுகின்றன!
பந்தாடும் நாயகி
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கொட்டையூர் அம்பாளின் பெயர் பந்தாடும் நாயகி. இங்கு அம்பாளின் ஒரு கால் கொஞ்சம் முன்னாலும் மற்றொரு கால் கொஞ்சம் பின்னாலும் பந்தாடுவது போல்
அமைந்துள்ளன.
உயரமான பைரவர்!
புதுக்கோட்டைக்கு அருகில் பொற்பனைக் கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பைரவர் கோயிலில் பைரவரின் சிலை பத்தடிக்கு மேற்பட்ட உயரம் கொண்டது. அதனால் ஏணி மேல் ஏறி நின்று தினமும் பைரவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
The post நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் appeared first on Dinakaran.