![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39069013-12.webp)
சென்னை,
கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கூட்டரங்கில், நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக, இன்று (12.02.2025) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் அனைத்துக் கோட்டப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் , ஆய்வுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த உரையில், நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளில் பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலான சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மீதமுள்ள சாலைகளை பள்ளமில்லா சாலைகளாகப் பராமரிக்க வேண்டும். சாலைகளின் இருபுறங்களில் உள்ள முட்புதர்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
சாலைகளின் இருபுறங்களிலும் மண் புருவங்கள் சரியாக அமைக்கப்பட வேண்டும். கிலோ மீட்டர் மற்றும் பர்லாங் கற்களுக்கு வர்ணம் பூச வேண்டும். அறிவிப்பு பலகைகள், சாலை உபகரணங்கள் மற்றும் இரும்பு தடுப்பான்கள் முதலியவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும், அதற்குத் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், அமைச்சர், தொடர்ந்து உரையாற்றுகையில்,
சாலைகளில் தேவையில்லாத இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டாம் என்றும், தேவையானால் அதற்குரிய இடத்தில், எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டும். சாலை உபகரணங்கள் IRC வழிகாட்டுதலின்படி, தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். சாலைகளில் வெள்ளைக் கோடுகள் தரத்துடன் போடப்பட வேண்டும்.
நிலஎடுப்புப் பணிகளில் பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கண்காணிப்புப் பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்புக் கொண்டு, நிலஎடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், 15.3.2025க்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த ஆண்டு பொறியாளர்களுக்குச் சாலைப் பாதுகாப்பு தணிக்கைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பாலங்கள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை(DPR) தயாரிக்கும்போது, ஆற்றின் அகலம், நீர் வெளியேற்றம், நீர்வரத்து, மழையின் அளவு, மண்ணின் தன்மை, பாலத்தின் நேர்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாலப்பணிகள் நடைபெறும் தளத்தில் களப்பணியாளர்கள் இல்லாமல் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
பாலப்பணிகளை கவனிக்க, "பாலம் கண்காணிப்புக் குழுமம்" அலகு (Bridge Monitoring Committee Wing) என்கிற தனி அலகு உருவாக்கப்படவுள்ளது. அதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து, பணிகளின் நிலைக்குறித்து, இக்குழுமத்தின் மூலம் ஒப்புதல் பெறவேண்டும் என்று உத்தரவிட்டார். தேர்தல் அறிக்கையில், அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் முடிக்கப்பட்ட பணிகளை தவிர, இதர அறிவிப்புகளை 31.3.2025க்குள் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து நிலஎடுப்பு பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும். பிற துறைகளினால் சாலைப் பணிகள் காலதாமதம் ஏற்பட்டால் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று ஆணையிட்டார்கள்.
முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சி.ஆர்.ஐ.டி.பி. 2024-2025இல் திட்ட பணிகளுக்கான பிரேரணைகள் தயாரிக்கும்போது, மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களின் தொகுதி சம்மந்தமான கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதனை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அமைச்சர் அவர்களின் உரையைத் தொடர்ந்து ஒவ்வொரு திட்டமாக ஆய்வு செய்து, பொறியாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.