
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, பொதுமக்களின் உடைமைகளை நாசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
9-ந் தேதி இரவு கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடுக்கூடலூர் பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு சென்றது. தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானையால் இரவு நிம்மதியாக தூங்க முடியாத நிலை உள்ளது. இதனால் வனத்துறையினர் யானை ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.