
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உள்ள யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என இரண்டு முறை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த 21ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளையும் மாணிக்கவாசகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மாணிக்கவாசகர் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் கலந்து கொண்டார். இரவு வெள்ளி ரிஷப வாகத்தில் குருத்தோலை சப்பரத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளினார். முக்கிய பிரமுகர்கள் தேர் சக்கரத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் தேரோட்டம் தொடங்கியது. ஆவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரில் எழுந்தருளிய மாணிக்கவாசகர், நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.