
சென்னை,
மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடியில் மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனால், தங்களுக்கு மறு தேர்வு தேவை என, ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 13 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, இதுகுறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. அத்துடன், விசாரணையை வரும் 2-ம் தேதி ஒத்திவைத்தது.