
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கத்தொடங்கி விட்டன. கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகள் தற்போதே முடிவுகளை எடுக்கத்தொடங்கி விட்டன.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்குமுன் டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். அன்று இரவே, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதேவேளை, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம், தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும் என்றார்.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்லமா சீதாமாரனை சந்தித்தார்.
இதனிடையே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் நேற்று சென்னை வந்தார். அவர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பங்கேற்றார். இதனை தொடர்ந்து நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியானது. அதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக பரவிய தகவலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தால் உங்களிடம் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை' என்றார்.