நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் சொத்துக்களை முடக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

2 months ago 7

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் சொத்துகளை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன், குணசீலன், மகிமை நாதன் மற்றும் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கக்கோரி தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் எம்.சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததை வைத்து ஆதாயம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனால், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் தங்கள் சொத்துகளை விற்கக் கூடும். அவர்களின் சொத்துக்களை முடக்கக்கோரி உள்துறை செயலாளரிடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, தேவநாதன் உள்ளிட்டோரின் சொத்துக்களை முடக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன், குணசீலன் மற்றும் மகிமை நாதன் மற்றும் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனம் உள்ளிட்டோரின் சொத்துகளை தற்காலிகமாக அரசு முடக்க வேண்டும். இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு, காவல் துறை உள்ளிட்டோர் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் சொத்துக்களை முடக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article