
புதுடெல்லி,
12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு நாளை (சனிக்கிழமை) இந்தி தேர்வு நடைபெறுகிறது. அதேநேரம் ஹோலி பண்டிகையால் நாட்டின் சில பகுதிகளில் இந்த தேர்வு எழுத முடியாத சூழல் உள்ளது. அவ்வாறு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறுகையில், 'நாட்டின் பல பகுதிகளில் ஹோலி பண்டிகை 14-ந்தேதி (இன்று) கொண்டாடப்படும் நிலையில், சில பகுதிகளில் 15-ந்தேதி கொண்டாடப்படவோ அல்லது 15-ந்தேதி வரை கொண்டாட்டங்கள் நீடிக்கவோ வாய்ப்பு உள்ளதாக சி.பி.எஸ்.இ.க்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் திட்டமிட்ட அட்டவணைப்படி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் 15-ந்தேதி தேர்வு எழுத முடியாத மாணவர்கள் பின்னொரு தேதியில் தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று கூறினார்.
தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான வாரியத்தின் கொள்கையின்படி, சிறப்புத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் சேர்ந்து இந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.