உலகிலேயே அந்த திறமை இந்தியாவிடம் மட்டுமே உள்ளது - ஆஸி.வீரர் பாராட்டு

3 hours ago 1

சிட்னி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அடுத்த 10 மாதங்களுக்குள் மற்றொரு ஐ.சி.சி. கோப்பையை சொந்தமாக்கியுள்ளது. அத்துடன் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்று சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் உலகிலேயே இந்தியாவிடம் மட்டுமே 3 வகையான கிரிக்கெட்டில் 3 வெவ்வேறு நாடுகளில் 3 அணிகளை களமிறக்கும் அளவுக்கு ஆழமான திறமை இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஒரே நாளில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்தில் ஒருநாள் போட்டியிலும், தென் ஆப்பிரிக்காவில் டி20 போட்டியிலும் விளையாடுவதற்கான அணிகளை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். அந்த போட்டிகளில் இந்தியா எதிரணிகளுக்கு சவால் அளிக்கும். மற்ற நாடுகளால் அதைச் செய்ய முடியாது.

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது சாதகமா என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் உலகம் முழுவதிலும் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறோம். ஆனால் இந்திய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடுகிறார்கள். அது நம்பர் 1 லீக். அதில் அனைத்து இந்திய வீரர்களும் சர்வதேச அளவில் திறமை கொண்ட வீரர்களும் கலவையாக விளையாடுகிறார்கள். எனவே அது மேலே இருக்கிறது.

அது பெரிய தொடர் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் அதில் மட்டுமே உட்கார்ந்து இருக்க முடியாது. ஏனெனில் வருடத்தில் 5 முதல் 6 வெவ்வேறு லீக் தொடர்களில் விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள். ஐ.பி.எல்.-ல் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மற்ற தொடர்களில் வாய்ப்பைப் பெறுவார்கள். இருப்பினும் உங்களிடம் நல்ல திறமை இருந்தால் மட்டுமே சிறந்த ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியும். இந்திய கிரிக்கெட்டின் ஆழம் மிகவும் பெரியது" என்று கூறினார்.

Read Entire Article