
சென்னை,
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைய இருக்கிறார். அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்க உள்ள இப்படத்தின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் அட்லீயை சந்தித்து இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், அட்லி அல்லது அல்லு அர்ஜுனின் பெயர் நேரடியாக இல்லாமல் இருந்தாலும், இது அவர்களது கூட்டணியில் உருவாகும் புது திரைப்பட அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.