திருவள்ளூர்: குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை வட்ட அளவில், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
The post நாளை ரேஷன் அட்டை குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.